LATEST NEWS
மானம், ரோஷம், சொரணை இல்லையா.? “சத்தியமூர்த்தி பவனை ‘விஜய் பவன்’னு மாத்திக்கோங்க” காங்கிரஸை வெளுத்து வாங்கிய திமுக பரந்தாமன்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்கியுள்ளதாகக் கூறி, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். தவெகவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகும் அக்கட்சியைக் கண்டிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மானம், ரோஷம், சொரணை இல்லையா என்று அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த அவர், சத்தியமூர்த்தி பவனை ‘விஜய் பவன்’ என மாற்றிக் கொள்ளுங்கள் என்று கிண்டலடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது ‘விஜய் போற்றி’ பாடும் ஒரு பஜனை மடமாக மாறிவிட்டதாகவும் தனது கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கட்சியின் கொள்கை அறிவிப்புகளுக்குப் பிறகு, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவை விமர்சிக்கும் அதே வேளையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸை திமுக பிரமுகர் இவ்வாறு பகிரங்கமாகச் சாடியிருப்பது தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
