LATEST NEWS
“வேட்டையாடப்பட்ட முக்கிய தளபதி” உளவுத்துறை பிடியில் சிக்கிய பாதுகாப்புத் தலைவர்… ரகசியங்கள் கசிந்ததால் பீதியில் உறைந்த ஹமாஸ் தளபதிகள்..!!
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அக்டோபர் 7 தாக்குதலை முன்னின்று நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி, காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அனல் பறக்கும் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கான்யூனிஸ் நகரில் உள்ள ஹமாஸின் முக்கிய நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய இந்தத் துல்லியமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ‘நுக்பா’ சிறப்புப் படைப்பிரிவு தளபதியான இவர் வான்வழியாக வேட்டையாடப்பட்டார். அண்மைக் காலமாக பிணைக் கைதிகளைச் சிறைபிடித்தது மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளை அளித்து வந்த காரணத்தினாலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குச் சில தினங்களுக்கு முன்பு, ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் என்பவரை இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினர் உயிரோடு கைது செய்தனர். உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து வாக்குமூலமாக அளித்து வருவதாகத் தெரிகிறது. முக்கியத் தளபதி கொல்லப்பட்டதும், பாதுகாப்புப் பிரிவு தலைவர் பிடிபட்டதும் ஹமாஸ் அமைப்பினரிடையே பெரும் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
