LATEST NEWS
“ஒரு தந்தையாகப் பெருமைப்படும் நேரம்” எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும்.. மகனை நேரில் சந்தித்து வாழ்த்திய பெற்றோர்.. முதலமைச்சர் விஜய்யின் நிதானத்தைப் பாராட்டிய எஸ்.ஏ.சி..!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதோடு அவையின் மையப்பகுதிக்குச் சென்று தர்ணாவிலும் ஈடுபட்டனர். இத்தகைய பெரும் சட்டமன்றக் கலவரம் மற்றும் இக்கட்டான சூழலிலும் முதலமைச்சர் விஜய் காட்டிய நிதானம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பரபரப்பான அவை நடவடிக்கைகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய்யை அவரது பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். சட்டமன்றத்தில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களையும், மோதல்களையும் முதலமைச்சர் கையாண்ட விதம் ஒரு தந்தையாகத் தனக்குப் பெருமையளிப்பதாக எஸ்.ஏ. சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரைச் சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமை பெற்ற நேரம்” எனப் பாராட்டியுள்ளார். பதவி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எனப் பல தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களை முதலமைச்சர் விஜய் மிகவும் நிதானத்துடன் கையாள்வதைக் கண்டு அவரது தந்தை பெருமிதம் அடைந்துள்ளார்.
