CRIME
பரபரப்பு… பினராயி விஜயன் மகள் டைரியில் சிக்கிய ரகசியங்கள்… துபாய்க்குப் பாய்ந்த ஹவாலா பணம்..? அதிர வைக்கும் பின்னணி..!!
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா விஜயன் ஆகியோர் மீது லஞ்சப் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் எந்தச் சேவையும் வழங்காமல், சி.எம்.ஆர்.எல். கனிமவள நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பினராயி விஜயன் மற்றும் அவரது மருமனும் முன்னாள் மந்திரியுமான முகமது ரியாஸ் எம்.எல்.ஏ. ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 27-ஆம் தேதி பினராயி விஜயன் மற்றும் முகமது ரியாஸ் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.
இதன் தொடர்ச்சியாக, பினராயி விஜயன், வீணா விஜயன் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கேரள மாநில டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பினராயி விஜயன் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட வீணா விஜயனின் ரகசிய டைரியில், ஹவாலா வழிகள் மூலம் துபாய்க்குப் பணம் அனுப்பப்பட்ட தகவல்களும், அங்கு நிறுவனம் தொடங்க அவர் முயற்சித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024 செப்டம்பர் 17-ஆம் தேதியிட்ட பதிவில் இந்தியாவில் இருந்து ரூ.85 லட்சம் அனுப்பப்பட்டு, அதில் 3.49 லட்சம் ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்களை துபாயில் பைஜாஸ் என்பவர் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பினாமி பெயரில் புதிய நிறுவனம் நிறுவி இந்தியாவில் லஞ்சமாகத் திரட்டப்பட்ட பணத்தை முதலீடு செய்வதே இதன் முக்கிய நோக்கம் என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், முகமது ரியாஸின் நண்பரான பெபீஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், கோழிக்கோட்டில் உள்ள அவரது வங்கி லாக்கரைச் சோதனையிட்டு 50 பவுன் நகைகளைக் கண்டறிந்து லாக்கருக்குச் சீல் வைத்துள்ளனர். அந்த நகைகள் தன் சகோதரிக்குச் சொந்தமானது என பெபீஷ் கூறியுள்ள நிலையில், முகமது ரியாஸ் மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஹவாலா பணம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
