LATEST NEWS
“காலையிலேயே ஹேப்பி நியூஸ்..! வேலைதேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… தமிழக அரசின் உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!”
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2026 தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2026 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2026 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/-, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/-, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/-, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/-, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 01.07.2026 உடன் தொடங்கும் காலாண்டிற்கான விண்ணப்பங்களை மனுதாரர்கள் 30.09.2026 வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
