LATEST NEWS
“தயவுசெஞ்சு என்னை அன்ஃபாலோ பண்ணாதீங்க..!” இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் குறைந்ததால் மன உளைச்சல்… வைரலாகும் இன்ஃப்ளூயன்சர் தியாஷா கோஸ்வாமியின் உருக்கமான வீடியோ..!!
டிஜிட்டல் தகவல்களை உருவாக்கி வரும் பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் தியாஷா கோஸ்வாமி, தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் தொடர்ந்து குறைந்து வருவதால் சந்தித்து வரும் மன உளைச்சல் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், தான் நினைத்த சில இலக்குகளை அடைய முடியாததால் எதிர்காலம் குறித்த குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அந்த வீடியோவில், “தயவுசெய்து என்னை அன்ஃபாலோ செய்யாதீர்கள், எனக்கு நிறைவேற்ற வேண்டிய கனவுகள் நிறைய உள்ளன” எனத் தனது ரசிகர்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது சாதனைகளைப் பற்றிப் பேசிய தியாஷா, கடந்த ஆகஸ்ட் 2026 மாதத்தில் மட்டும் இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும், தனது 16வது வயதிலேயே ஒரு புதிய தொழிலைத் தொடங்கி நடத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டில் மட்டும் 11 சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த நிதியியல் மற்றும் தொழில்முறை வெற்றிகள் எதுவும் தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றும், வாழ்க்கையின் பிற பகுதிகளில் ஏற்பட்ட தோல்விகள் தமக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாகவும் அவர் ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dc1d2SwTYcu/?utm_source=ig_web_button_share_sheet
தனது ‘விஷன் போர்டை’ சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆண்டில் 2 லட்சம் பின்தொடர்பாளர்களை அடைய இலக்கு நிர்ணயித்திருந்ததாகக் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1 லட்சம் பின்தொடர்பாளர்கள் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதமாகியும் 1.09 லட்சம் மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர், தொடர்ந்து ஃபாலோயர்கள் குறைந்து வருவது தமக்குக் கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்கத்தாவிலிருந்து மும்பைக்குக் குடிபெயரும் திட்டம் தடையானதையும் சுட்டிக்காட்டிய அவர், இறுதியில் “உங்களது கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்” என்று கூறி வீடியோவை முடித்துள்ளார்.
