LATEST NEWS
“கரூர் கேங் தலைவர் யார் தெரியுமா..?” பழிவாங்கும் அரசியல் இங்க செல்லாது… திமுக பிராண்டை உடைப்பேன்..! சட்டசபையில் பொங்கிய முதலமைச்சர் விஜய்..!!
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது, “கரூர் கேங் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர். மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான், இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்” என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றதும் அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது என்றும், 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கப்படவில்லை, ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார். திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்றும், மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள த.வெ.க. அரசு இனியும் அப்படிதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசவில்லை என நக்கல், நையாண்டியாக எதிர்க்கட்சியினர் பேசியதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு உறுப்பினர் கேள்விக்கும் எல்லா நேரங்களிலும் இடமளித்து பேசுவது தலைமைக்கு அழகல்ல என்றும், முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான் என்றும் கூறினார். தொடர்ந்து, திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்றும், குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் FIR பதிவதில் கால தாமதம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே என்றும் சாடினார். 2022-ல் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறல் தொடர்பாக புகாரை வாபஸ் பெற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும், கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம் தற்கொலை என சித்தரிக்கப்பட்டது என்றும் பட்டியலிட்டார். ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் கால தாமதம் செய்யப்பட்டு திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
ஆனால், தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மாநிலத்தின் முன்னேற்றம் என்பது குடிமக்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது என்றும், அரசை குறைகூறும் நோக்கில் கூறிய கருத்துக்களையும் மக்கள் பாதுகாப்பு கருதி பொறுப்புடன் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடு கூறிய கருத்துகளாக இருந்தாலும் அதில் பாகுபாடு பார்க்க மாட்டோம் என்றும், யார் மீது பழி போடலாம் என எதிர்க்கட்சிகள் போல் சிந்தித்து பழிபோடும் அரசியலை செய்ய மாட்டோம் என்றும் கூறி, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறு முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையை முடித்தார்.
