LATEST NEWS
திடீரென பின்வாங்கிய ட்ரம்ப்..! 13 நாட்களுக்குப் பிறகு திடீர் நிறுத்தம்.. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது ஏன்..? பின்னணியில் அதிர்ச்சி காரணம்.. பதறும் வளைகுடா நாடுகள்..!!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தொடங்கிய போர் தற்போது மேலும் விரிவடைந்து, மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் நெருக்கடியையும் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 13 இரவுகளாகத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வந்த அமெரிக்க இராணுவம், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் திடீரென நிறுத்தியுள்ளது. தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்க விரும்புவதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டாலும், போரைத் தீவிரப்படுத்தும் முடிவை அமெரிக்கா தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது வெளிப்படையாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கலுக்குச் சில முக்கியமான காரணங்களை நியூயார்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானை மேலும் தாக்கினால் போர் தீவிரமடைந்து, ஏற்கனவே ஆயுதப் பற்றாக்குறையில் இருக்கும் அமெரிக்கா பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். மேலும், ஈரானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் பாரசீக வளைகுடா நட்பு நாடுகளை அமெரிக்காவிடமிருந்து அந்நியப்படுத்தக்கூடும் என்றும், எரிசக்தி விநியோகம் முடங்கி உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் நிர்வாகமும் அவரது ஆலோசகர்களும் கருதுகின்றனர். இதன் காரணமாகவே ஈரான் மீதான உக்கிரமானத் தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதேவேளையில், ஹவுதிகள் சவுதி அரேபியா மீது நடத்தி வரும் தாக்குதல்கள் யேமனின் உள்நாட்டுப் போரை மீண்டும் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. 2022 முதல் அமலில் இருந்த போர்நிறுத்தம் தற்போதைய மோதலால் முறிவடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா மீது கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ள ஹவுதிகள், செங்கடலில் சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஹார்முஸ் நீரிணையைத் தொடர்ந்து, செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதையையும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தினாலும், ஹவுதிகளின் இந்த நடவடிக்கை வளைகுடாப் பகுதியில் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
