CRIME
“வாடா காட்டுப்புறா புடிச்சுத் தர்றேன்… ஆசையா கூட்டிப் போய்… 150 அடி ஆழக் கிணற்றில் இரு சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட கொடூரம்..! கொலையின் பகீர் பின்னணி..!!”
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் 7 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மாலையில் வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவர்கள் கேசவபாலாஜி என்ற இளைஞருடன் நடந்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையே, போடி அருகே கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கேசவபாலாஜியைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கேசவபாலாஜியின் தாயாருடன் சின்னத்தம்பி தகாத உறவில் இருந்ததால், அவரைப் பழிவாங்கத் திட்டமிட்ட கேசவபாலாஜி, சிறுவர்களிடம் “காட்டுப்புறா பிடித்துத் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி கரட்டுப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுமார் 150 அடி ஆழமுள்ள சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்கு அருகே அழைத்துச் சென்று, திடீரென இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுத் தப்பியோடியதாகத் தெரிகிறது. சிறுவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், கேசவபாலாஜியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட கேசவபாலாஜியின் வீட்டின் அருகே ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, காட்டுப்புறா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் கேசவபாலாஜியைப் பின்தொடர்ந்து செல்லும் கடைசி சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவி மனதை உலுக்குவதாக உள்ளது. இந்த இரட்டைச் சிறுவர் கொலைச் சம்பவம் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
