CINEMA
அன்று ‘எங்கள் வீட்டு மாப்பிள்ளை’…! இன்று ‘வாழ்க்கையை நாசம் செய்தவர்’…!ஜெயம் ரவிக்கு மறைமுகமாக ஆப்பு வைத்த குஷ்பூவின் எக்ஸ் பதிவு…!
கடந்த சில வாரங்களாகவே இவர்களைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் சூழலில், பாடகி கெனிஷா பிரான்சிஸும் இந்த விவகாரத்தில் சிக்கினார். சமீபத்தில் கெனிஷா, “தான் ரவியின் குடும்பத்தைப் பிரிக்கவில்லை என்றும், சென்னையிலிருந்தே நிரந்தரமாக வெளியேறுவதாகவும்” கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரவி மோகன், செய்தியாளர்களைச் சந்தித்து தனது குமுறல்களை வெளிப்படுத்தினார். அப்போது தனது பிள்ளைகளை ஆர்த்தி தரப்பு பார்க்க விடுவதில்லை என்றும், ஆனாலும் அவர்களின் படிப்புக்காக 50 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டியிருப்பதாகவும் வெடித்து அழுதார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ரவி பேசிய ஒரு விஷயம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிரவைத்தது. “எனது வாழ்க்கையை நாசமாக்கியது ஒரு மூன்றெழுத்து இட்லி நடிகைதான்” என்று அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த நடிகையின் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தப் பெண்ணுக்குத் தன்னைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்றும், அவரால்தான் பலருடைய வாழ்க்கை நாசமாகியிருக்கும் என்று மூத்த நடிகர்கள் மூவர் தன்னிடம் கூறியதாகவும் சீறினார். ரவியின் இந்த ‘மூன்றெழுத்து இட்லி நடிகை’ என்ற க்ளூவை வைத்தே, அது நடிகை குஷ்பூதான் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆரூடம் கூறத் தொடங்கினர்.
ரவி மோகன் இப்படிப் பேசிய சில மணி நேரங்களிலேயே நடிகை குஷ்பூ தனது எக்ஸ் (X) தளத்தில் மறைமுகமாக ஒரு பதிலடியைக் கொடுத்திருந்தார். அதில், “தங்களது டிஎன்ஏ-வை (DNA) நிரூபிப்பதிலேயே சிலர் மும்முரமாக இருக்கிறார்கள். நான் பேசியதெல்லாம் சரி என்று உணர வைத்ததற்கு நன்றி” எனப் பதிவிட்டிருந்தார். ரவி மற்றும் ஆர்த்தியின் திருமணத்திற்கு குஷ்பூ ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதால், தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ரவியின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், கடந்த காலங்களில் குஷ்பூ மற்றும் ரவி இடையே இருந்த சுமுகமான உறவைக் காட்டும் பழைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. அது ஒரு சைமா (SIIMA) விருது வழங்கும் விழா மேடையாகும். அதில் ரவிக்கு விருது வழங்கிய குஷ்பூ, “எங்கள் வீட்டு மாப்பிள்ளை ரவி. இவருடைய கண்களைப் பார்த்தாலே ரொமான்ஸ் வந்துவிடும்” என்று மேடையிலேயே ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருந்தார். மேலும், ஆர்த்தியையும் மேடைக்கு அழைத்து இருவரிடமும் விருதை ஒப்படைத்தார். அப்போது பேசிய ரவியோ, “தனக்கு சினிமாவில் வருவது போல ரொமான்ஸ் செய்ய வராது” என்று கலகலப்பாகப் பேசியிருந்தார். அன்று அத்தனை அன்போடு இருந்தவர்கள், இன்று இப்படி மோதிக்கொள்வது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
