LATEST NEWS
அரபு நாடுகளுக்கு இனி செக்…!விண்முட்டும் பெட்ரோல், கேஸ் விலைக்கு இனி குட்-பை…!ராஜஸ்தானில் சிக்கிய ‘இயற்கை’ புதையல்…!இந்தியாவின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றப்போகும் 25,000 கன மீட்டர் கேஸ்…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள டான்டேவாலா எரிவாயு பகுதியில், இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் புதிய இயற்கை எரிவாயு இருப்பை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. உலக அளவில் கடுமையான எரிசக்தி நெருக்கடி நிலவி வரும் இந்தச் சூழலில், இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி சுயசார்பு இலக்கை அடைய ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. சானு அமைப்பு (Sanu Formation) என்ற ஆழமற்ற பகுதியில் முதன்முறையாக இந்த இயற்கை எரிவாயு ஓட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய தளத்தில் இருந்து தினமும் சுமார் 25,000 நிலையான கன மீட்டர் (Standard Cubic Meters) அளவிலான இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் எரிவாயு மிகவும் தரமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இந்த இயற்கை எரிவாயுவில் கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவு மிகக் குறைவாக இருப்பதே ஆகும். இதனால், இதனைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்பதால், இது ஒரு தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது சமூக ஊடகப் பக்கத்தில் இக்கண்டுபிடிப்பு குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து, இது இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை வலுப்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்குப் பிறகு, இந்தியா தனது எரிபொருள் இறக்குமதியை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக, சர்வதேச அளவில் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்மூஸ் முனைய முடக்கத்தால் (Hormuz Strait Blockade) ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவும்.
கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கு ராஜஸ்தான் பகுதி நாட்டின் முக்கிய எரிசக்தி மையமாக அதிவேகமாக உருவெடுத்து வருகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு அப்பகுதியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பதுடன், ராஜஸ்தான் மாநிலத்தின் சுரங்கத் துறையில் புதிய முதலீடுகள் குவியவும் வழிவகுக்கும். இந்தியா தனது ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில் பெரும்பகுதியை வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே தீர்த்து வரும் நிலையில், ராஜஸ்தானில் கிடைத்துள்ள இந்த ஏராளமான இயற்கை வளம் நாட்டின் இறக்குமதிச் செலவை பெருமளவில் குறைத்து, இந்தியாவை எரிபொருள் சுயசார்பு நோக்கி வேகமாக அழைத்துச் செல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
