LATEST NEWS
அதிமுக கூடாரம் காலி? விஜய் கட்சியின் ‘மெகா ஆபரேஷன்’…!கம்பேக் கொடுக்கும் இபிஎஸ்.. ஆனால் அதற்குள் வாரிச்சுருட்டிய ஆதவ் அர்ஜுனா! தமிழக அரசியலின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்…!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த திடீர் நகர்வு ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அதிமுகவிற்குப் புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், தவெக அரசுக்கு ஆதரவாக கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தது கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணிக்கும் இடையேயான மோதல் இதனால் வெளிப்படையாக மாறியது. தற்போது ராஜினாமா செய்துள்ள 3 எம்.எல்.ஏக்களையும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் களம் இறக்கி, சட்டமன்றத்தில் தங்களது தனிப் பெரும்பான்மை பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிசாமி தனது அணியைப் பலப்படுத்தும் அதிரடி முயற்சிகளில் இறங்கியுள்ளார். வேலுமணி – சண்முகம் முகாமில் இருந்த ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார் மற்றும் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேபோல், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ மோகன் அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமியைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ திலீபன் ஜெய்சங்கர் மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ நடராஜன் ஆகியோரும் இபிஎஸ் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த அடுத்தடுத்த நகர்வுகள் எடப்பாடி பழனிசாமி அணியின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தியுள்ளதால், அவருக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அதிமுகவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி இன்னும் ஓயவில்லை என்றே தோன்றுகிறது. சி.வி.சண்முகம் தரப்பினர் கொறடா மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவிகள் தொடர்பாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் நிலையில், மறுபுறம் தவெக இன்னும் சில அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தன் பக்கம் இழுக்கக்கூடும் என்ற பேச்சுகளும் பலமாக அடிபடுகின்றன. இந்த இருமுனைப் போட்டியால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
