LATEST NEWS
“தப்பா சித்தரிக்காதீங்க…” தொழிலாளியிடம் தவெக எம்.எல்.ஏ அபிஷேக் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோவால் சர்ச்சை… கொந்தளித்த மக்கள்… நேரில் வந்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏ…!!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கும் கல்குவாரியில், தவெக எம்.எல்.ஏ அபிஷேக் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த ஒருவரிடம் ஆவணங்களைக் காட்டி படிக்கச் சொன்னபோது, அவர் நக்கலாக நடந்துகொண்டதோடு, ‘நீ யார் இதைக் கேட்பதற்கு?’ என்று ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடி தரும் வகையில் எம்.எல்.ஏ பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் விஜய் தவறு செய்பவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயல்பாடுகள் புதிய அரசுக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த விவகாரம் குறித்துப் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தாம் சாதாரணத் தொழிலாளர்களிடமோ அல்லது ஊழியர்களிடமோ தவறாகவோ, அவமரியாதையாகவோ பேசவில்லை என்று மறுத்துள்ளார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கைகளால் மட்டுமே கற்களை உடைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடத்தப்படும் அந்தக் குவாரியில், விதிகளை மீறி இயந்திரங்களைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களின் பேரில் அரசு அதிகாரிகளுடன் சென்றே ஆய்வு நடத்தியதாகக் கூறினார். தங்களது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும், விதிமீறல்கள் மற்றும் வெடி விபத்துகள் குறித்த புகார்களுக்கு ஆவணங்களைக் கேட்டபோது, சம்பந்தப்பட்ட நபர் ஒருமையில் பேசியதாலேயே தாம் அவ்வாறு பேச நேர்ந்தது என்றும் அதற்கான முழு ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
