CINEMA
விஜய்க்காக எழுதப்பட்ட ‘கருப்பு’ கதை…சூர்யாவுக்கு 300 கோடி வசூல்…முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த ஆர்ஜே பாலாஜி! சூர்யா ரசிகர்கள் ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறார்கள்? பின்னணி இதோ…!
தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே முதன்முறையாக கோடி ரூபாய் வசூலைக் குவித்து சாதனை படைத்த திரைப்படம் ‘கருப்பு’. இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைத் தேடித்தந்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சூர்யா ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த மோதலுக்குக் காரணம், சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவியுடன் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, அது குறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான பதிவுதான் என்று கூறப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி தனது பதிவில், “‘கருப்பு’ திரைப்படத்தை ஆரம்பித்து வைத்த மனிதருடன் இருப்பது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சருடன் இருப்பதை நினைத்தால் நனவா, கனவா என்றே தெரியவில்லை; அதே அமைதி, அதே அன்பு, நன்றி விஜய் சார்” எனக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், ‘கருப்பு’ படத்தின் கதை முதலில் விஜய்க்காக உருவாக்கப்பட்டது என்றும், பின்னர் சூர்யா இப்படத்திற்குள் வந்ததும் அவருக்காகக் கதை மாற்றப்பட்டு பிளாக்பஸ்டர் வெற்றியாக மாற்றப்பட்டது என்றும் ஆர்.ஜே.பாலாஜி முன்பே பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். சூழ்நிலை இவ்வாறு இருக்க, படத்தைத் தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு அவர் நன்றி சொன்னதை சூர்யா ரசிகர்கள் “முதுகில் குத்திய செயல்” என விமர்சிப்பது நியாயமற்றது என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, இப்படத்தின் பாடல்கள் வெளியான போதே சாய் அபயங்கரின் இசை குறித்தும், “நாங்க நாலு பேரு” பாடல் குறித்தும் சூர்யா ரசிகர்கள் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுத்தனர். தற்போது விஜய் சந்திப்பு விவகாரமும் சேர்ந்து கொள்ள, சூர்யா ரசிகர்கள் ஆர்.ஜே.பாலாஜியை ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “ஏற்கனவே கார்த்தி, சூர்யா ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர்; சிவகுமாரும் தனது பேரன் விஜய்க்குத்தான் வாக்களித்தார் எனப் பெருமையாகக் கூறியுள்ளார், நாளை சூர்யாவே விஜய்யைச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே இருந்த மோதலே அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறிய பிறகு ஓய்ந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் தொழில்முறைப் போட்டியைத் தாண்டி சினிமா பிரபலங்களை எதிரிகளாகப் பார்ப்பதும், அவர்களது குடும்பத்தினரை அசிங்கப்படுத்துவதும் முறையல்ல என்பதே நடுநிலையான சினிமா விரும்பிகளின் கருத்தாக உள்ளது.
