CINEMA
யாருக்கு அந்த மறைமுக ஸ்கெட்ச்…பாடல் நடுவே திடீரெனத் தோன்றிய ஜேசன் சஞ்சய்…டிஜிட்டல் உலகை ஆக்கிரமிக்கும் ‘சிக்மா ஸ்டைல்’! சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சய் கூட்டணியின் மரண மாஸ் அப்டேட்…!
தமிழக முதலமைச்சரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சியாக உருவாகும் இப்படத்திற்குத் தமன் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த முதல் பாடல் ரிலீஸிற்குப் பிறகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமனின் துள்ளலான மற்றும் அதிரடியான இசையில், ஸ்மைல் துப்பாகிஸ் மற்றும் எம்.சி. ரூட் இணைந்து பாடியுள்ள ‘Sigma Style’ (சிக்மா ஸ்டைல்) என்ற இப்பாடல், வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இப்பாடலில் இடம்பெற்றுள்ள “எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்”, “தகுதி தரம் பார்த்து பேசுறதில்ல மோரல்”, “பதவி மேல ஆசை இல்லை” போன்ற வரிகள் சமகால சமூக மற்றும் அரசியல் கருத்துகளை மறைமுகமாகப் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் அரசியல் கட்சிக்கான பாடலுக்கும் தமனே இசையமைத்திருந்த நிலையில், தற்போது ‘சிக்மா’ படத்திற்கும் அவர் இசையமைத்திருப்பது இப்பாடல் வரிகளின் மீதான அரசியல் பார்வையை மேலும் அதிகரித்துள்ளது.
இப்பாடலின் கூடுதல் சுவாரசியமாக, பாடல் காட்சிகளில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் சிறப்புத் தோற்றத்தில் வந்து நடனமாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பாடலின் இறுதிப் பகுதியில் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘போக்கிரி’ படத்தின் ரெஃபரன்ஸை நினைவூட்டும் வகையிலான மாஸ் காட்சியும் இடம்பெற்றுள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தனது திரைப்பயணத்தில் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலம் சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தியதைப் போல, தற்போது அரசியலில் அவர் முழு கவனம் செலுத்தி வரும் வேளையில், அவரது மகன் இயக்கும் முதல் படத்தின் பாடலிலும் அதே போன்ற துணிச்சலான கருத்துகள் இடம்பெற்றிருப்பது கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
