LATEST NEWS
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி… ஆனா அது மட்டும் நடக்கவே நடக்காது… சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். சமீபகாலமாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் அணியின் முக்கியப் பெண் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், மக்கள் இரட்டை இலை சின்னத்தை நம்பி வாக்களித்துத்தான் இவர்களை எம்.எல்.ஏ-க்களாக ஆக்கினார்கள் என்றும், அவ்வாறு வெற்றி பெற்றவர்களை தங்களின் சுயலாபத்திற்காகப் பதவி விலகச் செய்து சிலர் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என்றும் தவெக மற்றும் திமுகவை மறைமுகமாகச் சாடினார். “அரை நூற்றாண்டு கால நெடிய அரசியல் வரலாறு கொண்ட பலமிக்க அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது” என்று தனது பேச்சின் மூலம் தொண்டர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
