LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் சோகம்… குரங்குகளுக்கு உணவளிக்க முயன்ற 13 வயது சிறுமி… முதல் மாடியிலிருந்து விழுந்து பலி…!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திற்குட்பட்ட பிருந்தாவனின் சாந்த் காலனி பகுதியில் வசித்து வரும் அனில் பாண்டே என்பவரது குடும்பத்தில் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அனில் பாண்டே – அவரது மனைவி தம்பதியினர் அயோத்தியைச் சேர்ந்த பூர்வா என்ற சிறுமியைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பிருந்தாவனில் உள்ள பரிக்ரமா பாதையில் உணவுத் தள்ளுவண்டி கடை நடத்தி இந்தத் தம்பதியினர் வாழ்வாதாரத்தைக் கவனித்து வந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல இருவரும் வேலைக்குச் சென்றிருந்தனர். அப்போது வாடகை வீட்டின் முதல் மாடியில் சிறுமி பூர்வாவும், அவளுடைய தம்பி மட்டுமே இருந்துள்ளனர்.
அப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், சிறுமி பூர்வா முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குரங்குகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சமநிலை தவறியதால், ஜன்னலில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் தலைகுப்புற விழுந்தார். இந்த விபத்தில் சிறுமிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி ஜன்னலில் இருந்து கீழே விழும் இந்த நெஞ்சை உலுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிருந்தாவன் பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
