LATEST NEWS
வீட்டுக்குள் ஊர்ந்து திரிந்த 40 நல்லபாம்புகள்…! தொண்டைக்குள் நின்ற உயிர்… நொடிக்கு நொடி திக் திக் மீட்பு..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் ராம்டெக் பகுதிக்கு உட்பட்ட நெர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு தோமானே. இவரது வீட்டிற்குள் திடீரென அடுத்தடுத்து நல்லபாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒரே கூரையின் கீழ் இவ்வளவு அதிகமான விஷப் பாம்புகள் இருந்த செய்தி காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவியதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியும் பயமும் ஏற்பட்டது.
பாம்புகளின் கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த ராஜுவின் குடும்பத்தினர், உடனடியாக உள்ளூர் வனத்துறைக்கும் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சாச்சேர் பகுதியைச் சேர்ந்த ‘வைல்ட் சேலஞ்சர்’ என்ற அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல பாம்பு பிடி வீரரான ரத்தன் கும்பாரே தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். வீட்டின் பல்வேறு மூலைகளில் மறைந்திருந்த 40 நல்லபாம்பு குட்டிகளையும், எந்தவொரு பாம்புக்கும் காயம் ஏற்படாத வண்ணம், மிகுந்த எச்சரிக்கையுடனும் சாமர்த்தியத்துடனும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
வெற்றிகரமாக பாம்புகள் மீட்கப்பட்ட பிறகு, வனவிலங்கு பாதுகாப்பு விதிகளின்படி ராம்டெக் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி கோவிந்த் குமார் மற்றும் ரேஞ்ச் அதிகாரி ராகுல் ஷிண்டே ஆகியோரின் முன்னிலையில் உரிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. அதன்பின், மீட்கப்பட்ட 40 நல்லபாம்பு குட்டிகளும் மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. ஆபத்தான சூழலில் துணிச்சலாகச் செயல்பட்டு பாம்புகளை மீட்ட ரத்தன் கும்பாரே மற்றும் அவரது குழுவினருக்கு ராஜுவின் குடும்பத்தினரும் வனத்துறையினரும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
