CRIME
போலீசுக்கு போனால் கழுத்தை அறுப்போம்..! ஆள் மாறி கடத்தப்பட்ட கோவை காங்கிரஸ் பிரமுகர்… ₹2 கோடி கேட்டு மிரட்டிய சேலம் கும்பல்..! கோவையில் பதற்றம்.!!
கோயம்புத்தூரில் காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான தனசேகரன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம், கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தனசேகரனை தவறுதலாக கடத்தியதாகத் தெரிகிறது. பின்னர் தாங்கள் கடத்தியது வேறு நபர் என்பதை உணர்ந்த அந்த கும்பல், அவரைத் தாக்கி காயங்களுடன் ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது. அத்துடன் விடாமல், தனசேகரனிடமிருந்து அவருடைய கார், மொபைல் போன் மற்றும் வீட்டுச் சாவி ஆகியவற்றை அக்கும்பல் பறித்துக் கொண்டதோடு, அவரிடம் ரூ. 2 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தனசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தால் வீடு தேடி வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என்றும் அக்கும்பல் மிரட்டியுள்ளது. தற்போது காயமடைந்த தனசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணைத் தொடங்கி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
