CRIME
அம்மா, பாத்ரூம் தரை ஏன் இப்படி வெடிக்குது..? மகள் கேட்ட ஒரு கேள்வி… ஆக்ராவில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
ஆக்ராவைச் சேர்ந்த சுரேந்திர சர்மா என்பவர் கடுமையான குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அவர் தனது மனைவி ரூபி மற்றும் மகள்களைத் தொடர்ந்து கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட நினைத்த ரூபி, கடந்த மே 17 அன்று இரவு சுரேந்திரனின் கீரில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றுள்ளார். மறுநாள் காலை, போலீஸார் தேடி வருவதாகக் பொய் கூறி தனது மாமியார் மற்றும் மகள்களை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீடு காலியானதும், கணவரின் உடலை வீட்டிற்குள்ளேயே இருந்த குளியலறைக்கு இழுத்துச் சென்று, குழி தோண்டிப் புதைத்து, 400 ரூபாய்க்கு மண் வாங்கி மூடி, மறுநாளே கூலி ஆட்களை வைத்து அதன் மேல் சிமெண்ட் தளம் அமைத்து மறைத்துள்ளார். அதன் பின், மே 26 அன்று கணவரைக் காணவில்லை என போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய மகள்கள், குளியலறைத் தளம் திடீரென உயரமாக மாற்றப்பட்டிருப்பது குறித்துக் கேட்டுள்ளனர். அங்கு தண்ணீர் தேங்குவதால் சரி செய்ததாக ரூபி மழுப்பியுள்ளார். ஆனால், சில நாட்கள் கழித்து குளியலறைத் தளத்தின் ஒரு பகுதி வீங்கி, சிமெண்ட்டில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை ஒரு மகள் கவனித்துள்ளார். “அம்மா, குளியலறைத் தளம் ஏன் இப்படி விரிசல் விடுகிறது?” என்று மகள் கேட்ட கேள்வி ரூபியை நிலைகுலையச் செய்தது. உடனடியாக அவர் சிமெண்ட் கலந்து அந்த விரிசலை மூடினாலும், தன் கணவரின் பிணம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயமும் குற்ற உணர்ச்சியும் அவரைத் துரத்தத் தொடங்கியது.
மகள் எழுப்பிய சந்தேகத்தைத் தொடர்ந்து, சுரேந்திரன் காணாமல் போனது குறித்து விசாரணை செய்ய வந்த ஒரு போலீஸ் காவலர், ஆவணங்களுக்காக ரூபியைப் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் போலீஸாருக்கு உண்மை தெரிந்துவிட்டது என ரூபி பயந்துள்ளார். மேலும், இரவில் தூங்கும்போதெல்லாம் கணவன் குளியலறைத் தளத்தை உடைத்துக் கொண்டு பேயாகத் தன்னைத் தேடி வருவது போன்ற பிரமைகள் ஏற்பட்டு மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பயம் தாங்க முடியாமல், இறுதியாகத் தன் மாமியாரிடம் சென்று, “சுரேந்திரன் இனி வரமாட்டார், அவர் குளியலறைக்கு அடியில்தான் புதைக்கப்பட்டிருக்கிறார்” என்று அழுதுகொண்டே உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க, குளியலறையைத் தோண்டி சுரேந்திரனின் எலும்புக்கூட்டை மீட்ட போலீஸார் ரூபியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
