LATEST NEWS
“ஆவணங்களை ஒழுங்கா படிங்க..!” தி.மு.க.வுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம்..! விஜய் மீதான மனு தள்ளுபடி..!!
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில், தற்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்காக வரும் ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த கரூர் பயணத்திற்கும், த.வெ.க.வினர் பொதுவெளியில் பேசுவதற்கும் தடை விதிக்கக் கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சி.பி.ஐ. விசாரணை நடக்கும் சூழலில் முதலமைச்சர் கரூர் செல்வது மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போன்றோரின் பேச்சுகள் சாட்சியங்களைக் கலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, சி.பி.ஐ. அனுமதி பெறாமல் இந்த நிகழ்வை நடத்தக் கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேச அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தரப்பில் அவசர வழக்காக முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே அமர்வு, தி.மு.க. தரப்புக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தது. முந்தைய தி.மு.க. அரசு பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் கூட விஜய் பெயர் இல்லாத நிலையில், ஆவணங்களைச் சரியாகப் படிக்காமல் நீதிமன்றத்தில் வாதிடுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், “பொதுவெளியில் பேசுவதற்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை கேட்பீர்களா? கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றவாளி என்று கூறுவதை ஏற்க முடியாது” எனக் கூறி வழக்கை இப்போதே தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரித்தனர். நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தைத் தொடர்ந்து, தி.மு.க. தரப்பு தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
