LATEST NEWS
வறுமையின் கொடுமை..! ரொட்டி சுடும் போதே தூங்கி விழுந்த சிறுவன்… சிறுவனின் வறுமையைக் கண்டு கண் கலங்கிய நெட்டிசன்கள்..!!
ஒருபுறம் நாடு டிஜிட்டல் மயமாகி, விண்வெளித் துறையில் சாதனைகள் படைத்து முன்னேறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நள்ளிரவு நேரத்தில் சாலையோர தாபா ஒன்றில் ஒரு சிறுவன் தணல் வீசும் தந்தூரி அடுப்பின் முன்னால் நின்று தொடர்ந்து ரொட்டிகளைச் சுட்டுக் கொண்டிருக்கிறான். அளவுக்கு அதிகமான சோர்வாலும், நள்ளிரவு நேரம் என்பதாலும் அவனது கண்கள் தானாகவே சொருகுகின்றன. பசியும், குடும்ப சூழ்நிலையும் அவனைத் தூங்க விடாமல் துரத்த, வேலை செய்து கொண்டிருக்கும் போதே அவன் அப்படியே தூங்கி விழுகிறான்.
சோர்வினால் அந்தப் பிஞ்சு குழந்தை தூங்கி விழும் அந்தத் தருணத்தில், அங்கிருக்கும் ஒரு நபர் அச்சிறுவனின் தலையில் பலமாக அடித்து அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிறார். இந்த நெஞ்சை உலுக்கும் காட்சி இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி 60 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு குழந்தை வெறும் உயிர் வாழ்வதற்காக, தனது சிறுபிராயத்தைத் தொலைத்து, இந்த அளவிற்குச் சோர்வடையும் வரை உழைக்கக் கூடாது” என்று தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பலர், “இதைக் காணொளியாக எடுத்துக் கொண்டிருக்காமல், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுங்கள்” என்று கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கும், சிறுவர்களை இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவதைத் தடிப்பதற்கும் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், ஏழ்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இன்றும் தங்களது சிறுபிராயத்தை இழந்து, இது போன்ற சுரண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதுதான் கசப்பான எதார்த்தமாக உள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிறுவனை மீட்டு அவனுக்கு உரிய உதவிகளை உள்ளூர் நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
