LATEST NEWS
“இனிமே இங்க வராத… உன் அம்மா வீட்டுலயே இரு…!” கணவனின் ஒற்றை வார்த்தையால் மனமுடைந்த மனைவி..! 50 பவுன் நகை, ரூ.15 லட்சம் கார் கொடுத்தும் அடங்காத பேராசை…. கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் கோவிலம்பாக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!!
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி. பட்டதாரி ஆசிரியையான இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணுக்கு 50 பவுன் நகைகளும், மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகைகளும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் புவனேஸ்வரியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குழந்தையின் முதலாவது பிறந்தநாளையொட்டி புவனேஸ்வரியின் பெற்றோர், 1.25 பவுன் சங்கிலி மட்டும் அணிவித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி தனது தந்தை வீட்டின் அருகே உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுவதால், புவனேஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது அவரைத் தொடர்புகொண்ட கணவர் ஜானகிராமன் “வீட்டுக்கு வர வேண்டாம், உன் தாய் வீட்டிலேயே இரு” என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், வரதட்சணை கொடுமை குறித்து கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
