LATEST NEWS
“வைகோ, திருமாவை தள்ளிவைத்து காதர் மொய்தீனுக்குப் பதவி” தவெக கூட்டணியின் புதிய ஒருங்கிணைப்பாளர் யார்..? விஜய் அதிரடித் திட்டம்..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் மிக முக்கியமான திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. முந்தைய திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்பக்கம் சாய்ந்துள்ளன. இதனால் தவெக தலைமையில் ஒரு வலுவான புதிய கூட்டணி உருவாகி, தீவிர அரசியல் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
தற்போது இந்தக் கூட்டணியின் பெயர் மற்றும் ‘ஒருங்கிணைப்பாளர்’ பதவி யாருக்கு என்பது குறித்து முக்கியத் தலைவர்கள் மத்தியில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன. ஆரம்பத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பெயரும் இந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும், கூட்டணிக்குள்ளேயே மூத்த தலைவர்கள் பொதுவெளியில் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வது தவெக தலைவர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுகவை ஆதரித்த காரணத்தால் ப.சிதம்பரத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால் ப.சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க தவெக தரப்பில் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
இதன் விளைவாக, கூட்டணிக்குள் நிலவும் ஈகோ மற்றும் புகைச்சல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் ஒரு மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்த மூன்று முக்கியத் தலைவர்களையும் தவிர்த்துவிட்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவர் காதர் மொய்தீனை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க தவெக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசியலில் நீண்ட அனுபவமுள்ள அவரைத் தேர்வு செய்வதன் மூலம், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதோடு சிறுபான்மையினர் மத்தியிலும் தவெகவின் செல்வாக்கை மேலும் பலப்படுத்த முடியும் என விஜய் திட்டமிடுகிறார்.
