LATEST NEWS
“தமிழகத்திற்கு துரோகம் செய்தது காங்கிரஸ் தான்!”.. ஆதாரங்களுடன் பொங்கிய நயினார் நாகேந்திரன்.. தமிழக அரசியலில் வெடித்த சர்ச்சை..!!!
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகள் உருவாவதாகவும், தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவைத் தாரைவார்த்து மீனவர்களை வஞ்சித்தது, எமர்ஜென்சி காலத்தில் மாநில அரசுகளைக் கவிழ்த்தது, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது எனப் பாரம்பரியமாகத் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்தது காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கி கடந்த 12 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்து வரும் காங்கிரஸுக்கு மற்றவர்களைக் குறை கூற தகுதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளைப் பறித்தது என்ற நேரடிக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல், திமுகவின் பழைய பொய் பிரசாரமான “1 ரூபாய் வரிக்கு 29 பைசா” என்ற புளித்துப் போன கருத்தையே காங்கிரஸ் இன்னும் பேசிக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300 ரூபாய்க்கு மேலாகவும் உயர்த்திய “VB G RAM G” திட்டத்தை, காங்கிரஸின் புதிய கூட்டணிக் கட்சியான தவெக தலைமையிலான தமிழக அரசு வரவேற்றுச் செயல்படுத்தி வரும் சூழலில், களநிலவரம் தெரியாமல் காங்கிரஸ் அதை எதிர்த்து வருவதாகச் சாடியுள்ளார். பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை விடுத்து வெளியே மாநில உரிமை பற்றிப் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
