LATEST NEWS
“வயநாடு நிலச்சரிவு..! 6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… இன்னும் 2 பேரின் நிலை என்ன? நிலவரம்..!!”
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில், அனக்கம்பொயில்-மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது தேடுதல் மண்டலத்திலிருந்தும், அதன் அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கேரள அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை , தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதிகளிலும், அதன் அருகில் ஓடும் ஆற்றோரங்களிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பல தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் அறிவித்துள்ளார். மேலும், கட்டுமானப் பணியிடத்தில் தோண்டப்பட்ட மண்ணை முறையாக அகற்றாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
