CRIME
“300 சொகுசு ஹோட்டல்கள்.. 30 வருட இலவச வாழ்க்கை.. 69 வயது தமிழ்நாட்டு ‘கில்லாடி’ தாத்தா ஒடிசாவில் கைது.. திடுக்கிடும் பின்னணி”..!!
கடந்த முப்பது வருடங்களாக இந்தியாவின் 300-க்கும் மேற்பட்ட லக்ஸரி ஸ்டார் ஹோட்டல்களைப் போலி அடையாள அட்டைகள் மூலம் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 69 வயது முதியவர் பின்க்சன் ஜானின் நீண்ட காலத் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவர் தற்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். சொகுசு ஹோட்டல்களில் தங்கிவிட்டு ஒரு பைசா கூட பில் கட்டாமல் எஸ்கேப் ஆவதையே இவர் பல ஆண்டுகளாகத் தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தன்னை ஒரு வெளிநாட்டுச் சுற்றுலா வழிகாட்டி, யோகா மாஸ்டர் அல்லது ஆங்கில ஆசிரியர் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் ராய்ப்பூரிலுள்ள ஹயாத் ஹோட்டலில் தங்கி, ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்றியதோடு, அங்கிருந்த ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பையும் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒடிசாவின் புவனேஸ்வரில் இவரை மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த லேப்டாப்பையும் மீட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், இவர் 1990 முதல் நாடு முழுவதும் இதே பாணியில் சொகுசு ஹோட்டல்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார். 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது ஒரு ஹோட்டல் ஊழியர்களால் அவமதிக்கப்பட்டதால், அதற்குப் பழிவாங்கவே சொகுசு ஹோட்டல்களை இவ்வாறு ஏமாற்றத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். கடந்த 1996-ல் முதன்முதலில் கைதாகி சிறைக்குச் சென்றபோது, அங்கு பிரபல சர்வதேச மோசடி மன்னன் சார்லஸ் சோப்ராஜின் ஏமாற்று வித்தைகளால் ஈர்க்கப்பட்டு, அவரைப் போலவே போலி அடையாளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கேரளா, தமிழ்நாடு, கோவா உட்படப் பல மாநிலங்களில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பின்க்சன் ஜான் மீது ராய்ப்பூர் போலீசார் தற்போது மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
