CRIME
“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!” ஆன்லைனில் போதைப்பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!
கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகேயுள்ள பேராம்பிரா தனியார் பள்ளியில் பணிபுரியும் சில பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகக் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின்பேரில், மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் துபான்’ சிறப்புத் திட்டத்தின்கீழ் பேராம்பிரா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் மருதோம்கராவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியைக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அவர் இடைத்தரகராகச் செயல்பட்டு பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருட்களை விற்று வந்ததும் உறுதி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
கீர்த்தனாவிடம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அதே பள்ளியில் பணிபுரியும் காவியா என்ற ஆசிரியைக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், குற்றோத்து பகுதியைச் சேர்ந்த நிஷ்மா என்ற 3-வது ஆசிரியையும் இதில் சிக்கினார். இவர் பணம் பெற்றவுடன் ஆன்லைனில் லொகேஷன் அனுப்பி போதைப்பொருட்களை விநியோகிக்கும் நூதன முறையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளி மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நெட்வொர்க்கில் மேலும் சில ஆசிரியர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
