LATEST NEWS
ரூ. 50 லஞ்சம்.. மறுத்தால் குடியுரிமைக்கு ஆபத்து? வைரல் வீடியோவால் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் பரபரப்பு..!
இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் தீவிர திருத்தப் பணிகளின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் இரண்டு கட்டப் பணிகள் நடைபெற்று முடிந்தன. அந்த நடவடிக்கைகளின் போது, தகுதியற்ற மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் விதமாகப் பல கோடிப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட எஞ்சியுள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு இடையே, ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எழுந்துள்ள லஞ்சப் புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கப்ரோ கிராமத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரியான ஜமிலா பீபி என்பவர், வாக்காளர் சரிபார்ப்புப் படிவங்களை வழங்குவதற்கும் அதனைப் பூர்த்தி செய்வதற்கும் பொதுமக்களிடம் 50 முதல் 100 ரூபாய் வரை கட்டாயப்படுத்திக் கேட்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பணம் தர மறுப்பவர்களின் இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படும் என அவர் வெளிப்படையாக மிரட்டுவதாகவும், இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அந்த அதிகாரி, இது தன் நற்பெயரைக் கெடுக்கத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி என்று விளக்கம் அளித்துள்ளார்.
