LATEST NEWS
நீதித்துறை ஊழியரே..! உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்… நீதிபதிகளை மிரட்டி.. ஆவணங்களை முகத்தில் வீசியெறிந்த நபர்… அடுத்து நடந்தது என்ன..?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது, மனுதாரர் ஒருவர் நீதிமன்ற அறையிலேயே வழக்கு ஆவணங்களை வீசியெறிந்து, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த பிரபல் பிரதாப் என்ற மனுதாரரே இவ்வாறு நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுதாரர் நீதிபதிகளைப் பார்த்து, “நீதித்துறை ஊழியரே, லக்னோவின் விகாஸ் நகர் உதவி ஆணையருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன்” என்று அசாதாரணமான முறையில் கூறினார். அதற்கு நீதிபதி விஸ்வநாதன், “நீங்களா எங்களுக்கு உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்ட அடுத்த கணமே, ஆத்திரமடைந்த மனுதாரர் தனது வழக்கு ஆவணங்களை நீதிபதிகள் அமர்வை நோக்கி வீசியெறிந்தார். மேலும், இந்தியத் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற அறையில் இந்த அசம்பாவிதம் நடந்தவுடன், உச்ச நீதிமன்றப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அந்த மனுதாரரைக் கட்டுப்படுத்தி நீதிமன்ற அறையை விட்டு வெளியேற்றினர். இந்தத் திடீர் குழப்பத்திற்கு மத்தியிலும் நீதிபதிகள் தங்களது நிதானத்தை இழக்காமல் அமைதி காத்தனர். மனுதாரர் வெளியேற்றப்பட்ட பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பான அவரது சிறப்பு விடுப்பு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அன்றைய தினத்திற்கான மற்ற வழக்குகளின் விசாரணையைத் தொடர்ந்து நடத்தியது.
