CRIME
“நான் என் கணவருடன் தான் வாழ்வேன்”.. காதலனுடன் சென்ற மகளை பெற்றோர் செய்த காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மணமுடித்தனர். தற்போது தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அவர்கள் போலீசாரை அணுகியுள்ளனர். அவர்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியவர்கள் என்பதை உறுதி செய்த காவல் உதவி ஆய்வாளர் சீனிவாஸ் கவுட், இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “நான் என் கணவருடன் தான் வாழ்வேன்” என்று அந்த இளம்பெண் உறுதியாகத் தெரிவித்ததால், போலீசார் அவரை கணவரின் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை மூன்று கார்களில் திடீரென கணவர் வீட்டிற்குள் புகுந்த பெண்ணின் குடும்பத்தினர், இளம்பெண்ணைப் பலவந்தமாகக் கடத்த முயன்றனர். இதனைத் தடுத்த கணவர், அவரது தாயார், அண்ணன் மற்றும் அண்ணியைப் பெண்ணின் உறவினர்கள் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் இளம்பெண்ணைக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பாபன்னபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இருதரப்பினரையும் மெதக் வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை மற்றும் கவுன்சிலிங்கிற்குப் பிறகு சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
