LATEST NEWS
“தனி விமானம் பிடித்து ஓடியது யார்..?” மக்களுக்கு எல்லாம் தெரியும் பாஸ்… முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி அனல் பறக்கும் பதிலடி..!!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தனது கட்சிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க நேரில் சென்றிருந்தார். அங்கு நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்க்கட்சியான திமுகவை ஊழலின் “வெண்டிங் மெஷின்” (விற்பனை இயந்திரம்) என்று கடுமையாகச் சாடினார். தங்களது ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், சட்டப்பேரவையில் இதுபற்றிக் கேட்டபோது திமுகவினர் ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்குத் திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சமூக ஊடகப் பதிவின் மூலம் மிகக் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் செய்தி கிடைத்தவுடன், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனடியாக கரூருக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓட்டம் பிடித்தது யார் என்று கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என விஜய்யை நோக்கி அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அசாதாரணமான சூழ்நிலையில், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த போதும் தங்களது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசியது யார் என்று செந்தில் பாலாஜி தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச்சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது உரையைத் தொடர்ந்தது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது மக்களுக்குத் தெரியும்; ஓடு ஓடு ஓடு…” எனக் குறிப்பிட்டு முதலமைச்சரின் பேச்சுக்கு அவர் மிகத் தீவிரமான முறையில் தங்களது கண்டனத்தையும் பதிலடியையும் பதிவு செய்துள்ளார்.
