DISTRICT NEWS
இவரல்லவா மக்கள் அதிகாரி..! தன் குழந்தையை அரசு அங்கன்வாடியில் சேர்த்து முன்மாதிரியான.. பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறி..!!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் ஷரண்யா அறி, தனது இரண்டு வயதுடைய மகன் ஆத்விக்கை பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியாக இருந்தபோதிலும், தனது குழந்தையை அரசு மையத்தில் சேர்த்த அவரது இந்த எளிமையான மற்றும் முன்மாதிரியான செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் ஷரண்யா அறி விடுத்துள்ள செய்தியில், அரசு அங்கன்வாடி மையங்களில் விளையாட்டோடு கூடிய ஆரம்பக்கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான சூழல் போன்ற பல சிறப்பான வசதிகள் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கு குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் 11 மாதங்களுக்கான பிரத்யேகப் பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சி நிலையைத் துல்லியமாகக் கண்டறிய, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு அட்டையில் விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, அரசு அங்கன்வாடி மையங்களின் இத்தகைய உன்னதமான சேவைகளையும் முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, தங்களது குழந்தைகளையும் அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
