LATEST NEWS
“நான் யார் தெரியுமா..?” வழிவிடுங்கள் என்று கூறியதால்…! தம்பியின் கண் முன்னே இளைஞரை சுட்டுக்கொன்ற கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி எல்லைப் பகுதியில், தனது சகோதரனின் கண் முன்னே 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லி ஷாக்தராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த விபின் குமார் என்ற இளைஞரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற விபின், அங்கு வந்திருந்த உறவினர்களை வழியனுப்புவதற்காகத் தனது தம்பியுடன் லோனி எல்லைக் கால்வாய் பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உறவினர்களை வழியனுப்பிவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வழியில் சோனு என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது விபினும் அவரது தம்பியும் அவர்களைச் சற்று “வழிவிடுமாறு” அல்லது “விலகி நிற்குமாறு” கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோனு, “நான் யார் என்று உனக்குத் தெரியாதா?” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதலில் பாய்ந்த குண்டு விபினின் உறவினர் ஒருவரின் கையில் பட்டு, அவர் கையில் வைத்திருந்த மொபைல் போனும் சேதமடைந்தது. அடுத்த குண்டு விபினின் நெஞ்சுப் பகுதியில் பலமாகப் பாய்ந்தது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த விபினை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு டெல்லியில் உள்ள ஜிடிவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விபின் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளியான சோனு மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
