CRIME
திகில் துரத்தல்..! தட்டிக்கேட்ட பெண்ணின் குடும்பத்தை… 15 கி.மீ வேட்டையாடிய வன்முறை கும்பல்..! நாசிக்கில் நடுக்கத்தை ஏற்படுத்திய பகீர் சம்பவம்..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பாவலி அணை மற்றும் அருவிப் பகுதிக்கு பகவத் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வீடு திரும்பத் தயாரானபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் சில உள்ளூர் இளைஞர்கள் விசில் அடித்து, அநாகரிகமாக நடந்துகொண்டனர். பொது இடத்தில் நடந்த இந்த தவறான செயலை அந்தப் பெண் தைரியமாக தட்டிக்கேட்டதுடன், அவரது கணவரும் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அப்பகுதியில் இருந்த தங்களது நண்பர்கள் பலரையும் திரட்டி வந்து பெரிய கும்பலாக மாறி அக்குடும்பத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
சூழ்நிலை மோசமடைவதை உணர்ந்த குடும்பத்தினர் உடனடியாக தங்களது எஸ்யூவி காரில் ஏறி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த வன்முறைக் கும்பல், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரை அக்குடும்பத்தின் காரைத் துரத்திச் சென்று கொடூரத் தாக்குதல் நடத்தியது. காரில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததையும் பொருட்படுத்தாமல், இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகள் மற்றும் கற்களால் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்குதலின் போது குடும்பத் தலைவரின் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு செல்போன் பறிக்கப்பட்டதாகவும், உயிருடன் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் கார் முழுவதும் குழந்தைகளின் அலறல் சத்தம் நிறைந்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் சித்தி பகவத் வேதனையுடன் விவரித்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் அக்குடும்பத்தின் கார் கடுமையாக சேதமடைந்தது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாசிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். ஒரு பெண் தனக்கு நடந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காக, ஒரு முழு குடும்பமுமே பொதுவெளியில் அச்சுறுத்தப்பட்ட இந்தச் சம்பவம், சுற்றுலாத் தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், காவல்துறை கண்காணிப்பின் அவசியம் குறித்தும் சமூகத்தில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
