CRIME
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! இரண்டரை வயது குழந்தையின் நெற்றியில் ஆணி அடித்து… கண் தோண்டிக் கொலை..! பின்னணி என்ன..!!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஞ்சு மண்டல் தனது இரண்டரை வயது நடுத்தர மகன் ஆதித்யா குமாருடன் அருகில் உள்ள மஹாவீர் கோவில் வளாகத்தில் தூங்கச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் தந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, மர்ம நபர்கள் அருகில் படுத்திருந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் தந்தை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புதன்கிழமை காலை 5 மணியளவில் குழந்தையின் மாமா ஸ்ரீராம்பூர் படித்துறை பகுதிக்கு தேடிச் சென்றபோது, ஆற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டுள்ளார். உள்ளூர் மக்களின் உதவியுடன் உடலை மீட்டபோது அது காணாமல் போன ஆதித்யா என்பது உறுதியானது. கொலையாளிகள் அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொல்வதில் கொடூரத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். குழந்தையின் நெற்றியில் இரும்பு ஆணி அடிக்கப்பட்டிருந்ததுடன், வலது கண்ணின் அருகிலும் பலத்த காயங்கள் இருந்தன. குழந்தையின் நாக்கு வெளியே தள்ளியிருந்ததை வைத்து, நெற்றியில் ஆணி அடித்த பிறகு அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, ஆதாரங்களை மறைக்க உடலை ஆற்றில் வீசியிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த கொடூர கொலைக்கு குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் எண்ணமே காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தையின் தந்தை பஞ்சு மண்டல், தனது உறவினர் குடும்பத்தினர் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்குள் நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்ததாகவும், குழந்தை பிறந்த விழாவின் போது கூட அவர்கள் தங்களுக்குக் கடுமையான மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நாத்நகர் போலீசார், தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அறிவியல் பூர்வமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
