CRIME
தாயுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற மகள்… அடுத்த சில மணி நேரத்தில் நேர்ந்த பயங்கரம்.. உலுக்கிய மாடல் கிருத்தியின் மரணம்..!!
உடுப்பி அருகே உள்ள கல்மாடியைச் சேர்ந்த 27 வயதான இளம் மாடல் கிருத்தி பங்கேரா, கடந்த ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த இளம் பெண்ணின் இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கிருத்தி பங்கேரா இதற்கு முன்பு மணிப்பாலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். மாடலிங் துறை மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக, சமீபகாலமாக அந்தத் துறையில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கல்மாடியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் கிருத்தி தனது தாயாருடன் உணவு அருந்தியுள்ளார். பின்னர் தனது அறைக்குச் சென்றவர், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. குடும்பத்தினர் கதவைத் தட்டியும் எவ்விதப் பதிலும் வராததால், உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
கிருத்தி கடந்த சில நாட்களாகக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக அவருடைய உறவினர்கள் காவல்துறை தரப்பிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிருத்தியின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், மல்பே காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த மரணத்திற்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
