LATEST NEWS
பணமில்லை… உறவுகளுமில்லை…! 3 நாட்களாகக் கணவனின் சடலத்தோடு… வாழ்ந்த பெண்ணின் நெஞ்சை பிளக்கும் துயரம்..!!
பீகார் மாநிலம் கடாகரியா மாவட்டம், முஃபசில் காவல் எல்லைக்குட்பட்ட ராமசந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மனு சா. கூலித் தொழிலாளியான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சிகிச்சையிலேயே குடும்பத்தின் சேமிப்பு முழுவதும் கரைந்துபோனதால், இறுதிச் சடங்கு செய்யக்கூடப் பணமின்றி அவரது மனைவி உஷா தேவி தவித்தார். உறவினர்கள் யாரும் உதவிக்கு வராத நிலையில், வேறு வழியின்றித் தனது கணவரின் சடலத்துடன் 3 நாட்களாகத் தனது ஏழை குடிலிலேயே அழுது புலம்பியபடி காத்திருந்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினருக்கு இந்தத் துயரச் சம்பவம் தெரியவந்தது. குடிலில் இருந்த அந்தப் பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடித்த ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும், உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கிராம மக்கள் விறகு மற்றும் தேவையானப் பொருட்களைத் திரட்டித் தர, மனைவி உஷா தேவியே சடங்குகளைச் செய்து, தனது கணவரின் சிதைக்குக் கொள்ளியிட்ட உருக்கமான நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.
உயிரிழந்த மனு சா, தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தின் மூத்த மகன்கள் இருவர் வெளி மாநிலத்தில் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவர்களிடம் மொபைல் போன் அல்லது தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாததால் தந்தையின் மறைவுச் செய்தியைக் கூட அவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க முடியாமல் போனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
