LATEST NEWS
‘டாக் அம்மா’ சுஜாதா… விபத்தில் பறிகொடுத்த இரு மகன்கள்… இப்போது 240 ஆதரவற்ற நாய்களின் தாய்..! வலியையே சேவையாக மாற்றிய நெகிழ்வூட்டும் கதை..!!
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த பலதுகு சுஜாதா என்பவர், 2008-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது நேரிட்ட சாலை விபத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார். இந்த மீள முடியாத துயரத்தால் உடைந்திருந்த சூழலில், சாலையில் காயமடைந்து நகர முடியாமல் கிடந்த ஒரு தெரு நாயைக் கண்டு, அதை வீட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துப் பராமரித்தார். அதற்கு ‘சேஷு’ எனப் பெயரிட்டு வளர்த்த அவர், அந்த ஜீவனின் மூலம் தனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் கண்டடைந்தார்.
தனது சொந்தத் துயரத்தைக் கருணையாக மாற்றி, 2008-இல் ‘சாய் ஜீவகாருண்ய சேவா சன்ஸ்தா‘ என்ற காப்பகத்தைத் தொடங்கினார். விஜயவாடா கிராமப்புற மாவட்டத்தில் உள்ள தடேபல்லி-கொத்தூர் பகுதியின் மாந்தோப்பில் இயங்கி வரும் இக்காப்பகத்தில், தற்போது விபத்தில் காயமடைந்த, நோயுற்ற மற்றும் கைவிடப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இக்காப்பகத்தில் உள்ள நாய்களுக்கு தினமும் சுமார் 20 லிட்டர் பால், தயிர் மற்றும் 50 கிலோ அரிசி உணவாக வழங்கப்படுகிறது. இம்மையத்தை நிர்வகிக்க மாதந்தோறும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், 6 பெண் ஊழியர்கள் நாய்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் நிதிச் சவால்கள் இருந்தபோதிலும், சுஜாதா பின்வாங்காமல் தனது சேவையைத் தொடர்ந்து ‘நாய் அம்மா’ என்று அன்போடு அழைக்கப்பட்டு, விலங்கு நல ஆர்வலர்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
