CRIME
“அட பாவமே..! கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்த புருஷன்…தொண்டையை நெரித்துக் கொன்ற மனைவி… அஜ்மீர் விவசாயி கொலையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!”
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இது தற்கொலை அல்லது இயல்பான மரணம் போல் காட்டப்பட்ட நிலையில், முகேஷின் உறவினர்கள் அவரது மனைவி விமலா தேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபால் சிங் மீது சந்தேகம் எழுப்பி காவல்துறையில் புகாரளித்தனர்.
காவல்துறையின் தீவிர விசாரணையில், இந்த மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது அம்பலமானது. சுரங்கத் தொழில் செய்து வரும் கோபால் சிங்கிற்கும் விமலா தேவிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், இச்சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இருவரையும் முகேஷ் நேரில் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விமலா தேவியும் கோபால் சிங்கும், முகேஷைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினர். சம்பவத்தன்று இரவில் குழந்தைகள் அனைவரையும் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, முகேஷின் தொண்டையை நெரித்துக் கொன்றதுடன், தற்கொலை போல் திசைதிருப்ப முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து நாடகமாடியுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பீசாங்கன் காவல் நிலைய அதிகாரி பாருல் யாதவ் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முகேஷின் மனைவி விமலா தேவி, அவரது கள்ளக்காதலன் கோபால் சிங் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு நபர் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். 2010-ல் திருமணமான இந்தத் தம்பதியருக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
