CINEMA
“திடீர்னு பீரியட்ஸ் வந்திடுச்சு, பேக்லயும் நாப்கின் இல்ல” சென்னை ஏர்போர்ட்டில் தவித்துப் போன நடிகை லதா ராவ்.. பெண்கள் கழிப்பறையில் நாப்கின் மெஷின் எங்கே? – பயணிகள் அதிரடி கேள்வி..!!
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், தனக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட போது எதிர்கொண்ட மோசமான அனுபவம் மற்றும் தவிப்பு குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவசரத் தேவையின் போது தற்செயலாகத் தனது கைப்பையில் சானிட்டரி நாப்கின் இல்லாததால் அவர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். பெண்கள் பயணங்களின் போது தங்களின் பாதுகாப்பு கருதி எப்போதும் நாப்கின்களைக் கையில் வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரமான அனுபவத்தின் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விமான நிலைய வளாகத்திற்குள் பணம் செலுத்தி நாப்கின் பெறும் இயந்திரம் சரியாகச் செயல்படவில்லை என்றும், அங்கிருந்த பார்மசிக்குச் சென்று வாங்குவதிலும் அடுக்கடுக்கான தாமதங்கள் ஏற்பட்டதாகவும் லதா ராவ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கூட அவசரக் காலத்தில் பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதில் இவ்வளவு பெரிய குறைபாடு நீடிப்பதா என்று அவர் தனது வீடியோ பதிவில் வேதனை கலந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையப் பெண்கள் கழிப்பறைகளில் முன்பு பயன்பாட்டில் இருந்த நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் திடீரென அகற்றப்பட்டது ஏன் என்று சக பெண் பயணிகளும் தற்போது சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெண்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, விமான நிலைய நிர்வாகம் உடனடியாக அனைத்துப் பெண்கள் கழிப்பறைகளிலும் தரமான நாப்கின் இயந்திரங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
