LATEST NEWS
ஐயோ கொடுமையே..! கொண்டாட்டத்தில் நடந்த பேரழிவு… நொடிப் பொழுதில் பறிபோன இரு உயிர்கள்… மகாராஷ்டிராவை உலுக்கிய தயிர் பானை போட்டி விபத்து..!!
மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியின் போது நடந்த இரு வேறு விபத்துகளில் 7 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாட் பகுதியில் இளைஞர் குழுவினர் முன் அனுமதியின்றி நடத்திய திருவிழாவில் தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தயிர் பானையைக் கட்டுவதற்காக மரத்திற்கும் கட்டிடத்தின் செங்கல் தூணுக்கும் இடையே கயிறு கட்டப்பட்டிருந்தது. இளைஞர்கள் பிரமிடு அமைத்து பானையை உடைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தச் செங்கல் தூண் சரிந்து கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த 7 வயது சிறுவனின் தலை மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிறுவன் மால்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதேபோன்று மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியின் போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியாக நடைபெற்ற போட்டிகளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு விபத்துகளும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த துயர சம்பவங்கள் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், தயிர் பானை உடைக்கும் போட்டிகளின் போது மனித பிரமிடுகளை அமைக்கும் அமைப்பாளர்களும், போட்டியில் கலந்து கொள்பவர்களும் அரசாங்கம் விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் மற்றும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
