LATEST NEWS
“அன்று சட்டை அடி… இன்று பெரியார் புகழ்..!” 2 ஆண்டுகள் பழைய வீடியோவை தோண்டி எடுத்த நெட்டிசன்கள்.. அண்ணாமலையின் ‘யு-டர்ன் அரசியல் அம்பலம்..!!
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. சமூகப் பாகுபாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பெரியார் மேற்கொண்ட போராட்டங்களை அண்ணாமலை நேர்மறையாகக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பது, அவருடைய வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இதற்கு முன் பெரியாரின் ஆன்மீக எதிர்ப்பு நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் தீவிரமாக எதிர்த்து வந்தவர், தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய பிறகு பெரியாரைப் புகழ்ந்து பேசுவது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கொள்கையுடைய வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வே என்று திராவிட இயக்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்த நிலையில், நெட்டிசன்கள் சிலர் அண்ணாமலையின் இரண்டு ஆண்டுகள் பழைய வீடியோ ஒன்றை மீண்டும் தோண்டி எடுத்து டிரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு கோவையில் அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமைக்கு எதிராகவும், முருகன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் அண்ணாமலை தனக்குத்தானே சட்டை அடிஅடித்துக் கொண்ட அந்த வீடியோவைப் பகிர்ந்து, அன்று நேர்த்திக்கடன் செலுத்தியவர் இன்று மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பெரியாரைப் புகழ்வது முரண்பாடாக உள்ளதாகக் கேள்வி எழுப்புகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிப் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அண்ணாமலையின் இந்த அதிரடி மாற்றம், தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
