LATEST NEWS
நமக்கு ஓட்டு போடாதவன் நம்ம பொருளை வாங்கக் கூடாது… முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் வாக்குச் சதவீதங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் ஆவேசமாகப் பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “டிவிகே 168 வாக்குகளும், நாம 130 வாக்குகளும் தான் எடுத்திருக்கோம், இதுக்கு என்ன காரணம்? முக்கியமா, நமக்கு ஓட்டு போடாதவங்க நாம கொடுக்கிற பொருள் எதையும் வாங்கக் கூடாதுல்ல?” என்று கடுமையான தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதே நிலை தொடர்ந்தால் வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் கவுன்சிலர் தேர்தல்களிலும் வாக்குகள் கைநழுவிப் போகும் என உறுப்பினர்களைக் கடிந்து கொண்டார்.
இந்தக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும் எதிர்த்தரப்பு அரசியல் ஆதரவாளர்களும் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மக்களுக்குச் சரியான நலத்திட்டங்களைச் செய்து கொடுத்து நம்பிக்கையைப் பெற வேண்டுமே தவிர, வாக்களிக்காத மக்களை மிரட்டும் பாணியில் பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனப் பலரும் பொங்கி எழுந்துள்ளனர்.
