LATEST NEWS
நெதன்யாகுவுக்குப் பாராட்டா..? காசா இனப்படுகொலைக்கு ஆதரவா..? பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்..!!
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பாராட்டிப் பேசியதற்கும், காசாவில் நடக்கும் தாக்குதல்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படும் சூழலில், நெதன்யாகுவின் “வலுவான தலைமைத்துவத்தை” பிரதமர் மோடி பாராட்டியது வெட்கக்கேடானது மற்றும் தார்மீக ரீதியாகத் தவறானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இந்தியா நீண்டகாலமாகப் பின்பற்றி வந்த பாலஸ்தீன ஆதரவுக் கொள்கையிலிருந்து தற்போதைய பாஜாக அரசு முற்றிலும் விலகிவிட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி காலம் முதல் பாலஸ்தீனத்திற்குத் தனி இறையாண்மை கொண்ட நாடு தேவை என்ற இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டதாகவும், காசா போரினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் குறித்தும், மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் குறித்தும் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளையும் நெதன்யாகுவையும் விமர்சித்து வரும் வேளையில், இந்தியப் பிரதமர் அவருடன் நெருக்கம் காட்டுவது இந்தியாவின் உலகளாவிய தார்மீக மதிப்பைச் சீர்குலைப்பதாகக் காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும், காசாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராகப் பிரதமர் மோடி குரல் கொடுக்காமல் இருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட “தார்மீக கோழைத்தனம்” மற்றும் வரலாற்றுத் துரோகம் என்றும் காங்கிரஸ் Working Committee தனது அறிக்கையில் கடுமையாக விவரித்துள்ளது.
