LATEST NEWS
தமிழக அரசியலில் புயல்…! “விஜய் ஆட்சியில் லஞ்சமே இல்லை…!” மேடையில் அதிரடி கிளப்பிய ப.சிதம்பரம்..!!
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்” விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நிலைநிறுத்தப்பட்டு, காமராஜர் ஆட்சியின் உயரிய பண்புகள் மீண்டும் மலர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், காமராஜர் தலைமையிலான 9 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு அமைச்சரின் மீதும் லஞ்சப் புகாரோ, அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டோ எழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத நிர்வாக நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாகப் பத்திரப்பதிவு அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் லஞ்சமின்றி நிர்வாகம் நடைபெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறிய அவர், காமராஜர் ஆட்சியைப் போன்ற ஊழலற்ற நிர்வாகம் 5 ஆண்டுகளும் நீடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் ஆட்சியின் சிறந்த அம்சங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகத் தற்போதைய முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருவது மக்களிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
