LATEST NEWS
“என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்…” ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் நடைபாதையில் கண்ணீருடன் கதறும் தாய்…! உ.பி. அரசு மருத்துவமனை வாசலில் அரங்கேறிய கொடூரம்..! நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தபடி தீவிர சிகிச்சை தேவைப்படும் குழந்தையுடன் பெற்றோர் அமர்ந்திருக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, அம்மாநிலத்தின் பொது சுகாதாரத் துறை கட்டமைப்புகள் குறித்த பெரும் கவலையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு நடைபாதையில் அமர்ந்திருக்கும் அந்த தம்பதியின் கையில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் மருத்துவக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையின் தாய் கண்ணீருடன் வழிப்போக்கர்களிடம் உதவி கேட்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதிக கூட்ட நெரிசல் காரணமாகவே அவர்களுக்கு உள்ளே இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரெடிட் தளத்தில் ‘ShivamKhandex’ என்ற பயனரால் “உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல். அரசு மருத்துவமனைகளின் நிலைமை” என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டது. வீடியோ வெளியான குறுகிய காலத்திலேயே பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலானது. உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் நடைபாதையில் தவிக்கும் இக்கட்டான நிலையைப் பார்த்து சமூக வலைதளப் பயனர்கள் பலரும் கடும் அதிர்ச்சியையும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாதது குறித்தும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கொடூரமான மருத்துவ நெருக்கடிகளை நினைவூட்டுவதாகப் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “இந்தியாவில் போதுமான அளவு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் நடைமுறை நிலைமை இதுதான்” என்றும், “பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவம் எளிதாகக் கிடைக்கிறது, மற்றவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை காத்திருக்க வேண்டியுள்ளது” என்றும் நெட்டிசன்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
