LATEST NEWS
செங்கடலில் வெடித்த பெருமோதல்..! பாப் அல்-மண்டேப் ஜலசந்தியைப் பிடிக்க ஹவுதிகள் அதிரடித் தாக்குதல்… 60-க்கும் மேற்பட்டோர் பலி… உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல்..?!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. 2014-ல் சனா நகரத்தைக் கைப்பற்றிய ஹவுதிகளை எதிர்த்து சவுதி கூட்டணி களமிறங்கிய நிலையில், 2022 போர் ஒப்பந்தம் சனா விமான நிலையத் தாக்குதலால் முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு 129 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நடைபெற்ற மீண்டும் ஒரு தாக்குதலில் 26 ஏமன் படையினரும் 31 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் பலியாகியுள்ளனர். ஏமன் கடற்கரையோர நகரங்களை ஒட்டியுள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தியைக் கைப்பற்றும் நோக்கில் இத்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் கப்பல்களுக்குப் பாப் அல்-மண்டேப் ஜலசந்தி மிக முக்கியமான கடல்வழித் தளமாகும். உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கிய பிறகு சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதிக்கு இதனைப் பயன்படுத்தி வருகிறது. மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில், இங்கும் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் உலகளாவிய பொருட்களின் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஹவுதிகள் இத்துறைமுக நகரத்தைக் கைப்பற்றி செங்கடல் கடற்கரையோர முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும். ஹவுதிகளின் இந்த முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ஏமன் நாட்டின் ஏடன் நகரத்தில் இருந்து கூடுதல் படைகள் வந்து கொண்டிருப்பதாக ஏமன் அரசாங்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
