LATEST NEWS
“சவுதிக்கு விழுந்த பலத்த அடி..” நடுவானில் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ.. மத்திய கிழக்கில் பதற்றம்..!!
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஏமனின் மரீப் பகுதியில் சவுதி அரேபியாவின் அதிநவீன எப்-15 போர் விமானத்தை ஏவுகணை மூலம் தகர்த்துவிட்டதாகக் கூறி, எரியும் விமானப் பாகங்கள் அடங்கிய 4 நிமிட வீடியோ ஒன்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஏமனின் மரீப் மாகாண வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்-வழி ஏவுகணையை பயன்படுத்தி அதனை வீழ்த்தியதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள 4 நிமிட காணொலியில், வானில் விமானத்தைக் குறிவைத்துத் தாக்குவதும், பின்னர் பாலைவனப் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கருகிய நிலையில் தீப்பற்றி எரியும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் வீடியோ ஆதாரத்துடன் உரிமை கோரப்பட்டாலும், சவுதி அரேபியா தரப்பில் இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விமானம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் அதன் வகையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹவுதிகளும் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி பதில் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
