LATEST NEWS
“குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டல பாஸ்” அதை மறைக்க தேமுதிக மீது பழிபோடுகிறாரா திருமாவளவன்..? பிரேமலதா விஜயகாந்த் காட்டம்…!!
திமுக கூட்டணியிலிருந்து பிற கட்சிகள் வெளியேறுவதற்கு தேமுதிகதான் ஒரு முக்கிய காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்குச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், திருமாவளவன் மீது தேமுதிகவிற்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், 2015-ல் அவர் மக்கள் நலக்கூட்டணியை அமைத்து விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றதையும், தனக்காக அவர் பிரசாரம் செய்த நன்றியையும் தான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று கூறினார். இருப்பினும், இன்று அவர் மாற்றிப் பேசுவது ஏற்கும் வகையில் இல்லை என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பதவி கிடைத்த ஒரே காரணத்திற்காகவே திருமாவளவன் தற்போது வேறொரு கூட்டணிக்குச் சென்றுள்ளார் எனக் குற்றம் சாட்டினார். விசிக வென்ற இரண்டு இடங்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்ற இலக்கோடே செயல்பட்டுவிட்டு, கம்யூனிஸ்டுகளைப் போல ஏன் வெளியிலிருந்து ஆதரவு தரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். சுயமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதற்காகத் தேமுதிக மீது பழிபோடுவது மிகத் தவறானது என்றார்.
அமைச்சரவையில் சேருவதற்காகக் கூட்டணி மாறியதை மறைக்க விசிக முயல்வதாகக் குறிப்பிட்ட பிரேமலதா, இது “குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதையாக உள்ளது எனப் பகடி செய்தார். எதற்காகத் தேமுதிக மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி எனக் கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி தலைமை எடுக்கும் முடிவைக் கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், உண்மைக்குப் புறம்பான காரணங்களைச் சொல்லித் திருமாவளவன் மழுப்பக் கூடாது என்றும் கூறித் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
